திருச்சி: விமான நிலையத்தில் 1500 கிராம் தங்கம் கடத்திய 2 பேர் கைது
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து 1500 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை திருச்சி விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையம் வழியாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கம் கடத்தி செல்வதாக புகார் எழுந்ததால் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கம் போல தீவிரமாக பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த சிங்கப்பூர் குடியுரிமையை கொண்ட செல்வம் மற்றும் மன்னார்குடி அருகே உள்ள திருமாகோட்டை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளுக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதில் செல்வம் கொண்டு வந்த பெட்டிக்குள் 664 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்களும், ராஜேந்திரன் கொண்டு வந்த பெட்டிக்குள் 769 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாள் இரவில் ரூ.44 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 432 கிராம் கடத்தல் தங்கம் சிக்கியது திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.