நெல்லையில் 2 சிறார்களுக்கு பன்றிக் காய்ச்சல்... தீவிர சிகிச்சை
நெல்லை: நெல்லையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 2 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, பெருமாள்புரம், வசந்தம் நகர் பகுதியில் வசிக்கும் நான்கு வயது மற்றும் ஒரு வயது ஆண் குழந்தைகள். இந்த இருவரும் சமீபத்தில் தங்களது பெற்றோருடன் ஹைதராபாத் சென்று திரும்பி உள்ளனர்.
(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)
திரும்பி வந்த பிறகு, சிறுவர்களின் தாய்க்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறார்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.