விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்
விருதுநகர்: சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ஓ. கோவில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் அறைகள் வெடித்து தரைமட்டமாகின. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இன்று காலையில் சங்கரலிங்கபுரத்தை அடுத்த ஓ. கோவில்பட்டியில் தனியார் ஆலைக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமானது.
அந்த அறையில் மருந்து கலக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாசி அருகே முதலிபட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.