சத்தியமங்கலம்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி- ஒருவர் மாயம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலத்தை பைக்கில் கடக்க முயன்ற போது அடித்து செல்லப்பட்ட 3 பேரில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கஸ்தூரி நகரில் உள்ள தரைப்பாலத்தில் 3 தொழிலாளர்கள் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது, வெள்ளத்தில் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது, 3 பேரில் வடபழனியை சேர்ந்த வினோத் மற்றும் சுரேந்திர பிரசாத் ஆகிய இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
வினோத் அந்த பகுதியில் உள்ள மளிகைக்கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் கூறும்போது, ''இரவு நேரத்தில் 3 பேரும் தரைப் பாலத்தை கடந்ததால் காற்றாட்டு வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் வெள்ளப் பகுதியில் ஆற்றை கடக்க வேண்டாம்" என்றார்.