திருத்தணி அருகே புளியமரத்தின் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பரிதாப பலி
திருத்தணி: திருத்தணி அருகே புளியமரத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக பலியானார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பகுதி கனகம்மா சத்திரம். இங்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுக்க போர் போடுவதற்காக, போர் போடும் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி மூலம் திருச்செங்கோடை சேர்ந்த 9 பேர் வந்து கொண்டிருந்தனர்.
கனகம்மா சத்திரம் அடுத்த கூர்மவிலாசபுரம் என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது புளியமரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், முருகையன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீதமுள்ள 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உயலை இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர் தினத்தன்று வேலைக்காக வந்து விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது