ஏன் செல்லங்களா.. உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கலையாக்கும்!
சத்தியமங்கலம் சாலையில் 2 சிறுத்தைகள் விளையாடின
Recommended Video
சத்தியமங்கலம்: அழகிய மலைப்பிரதேசம், இயற்கையான காற்று, பச்சைபசேல் வனப்பகுதிக்குள் விலங்குகள் ஒன்றொடொன்று மோதி விளையாடும் அழகை பார்க்க யாருக்குத்தான் ஆசை வராது. இந்த அழகை பார்க்கவே எத்தனையோ சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் ஜாலி பயணம்கூட மேற்கொள்வர். யானைகளோ, புலிகளோ, மான்களோ, மயில்களோ எதுவானால் என்ன... அவைகள் ஒன்றோடொன்று கட்டிப்பிடித்து பிணைந்துகொண்டு விளையாடினாலும், சண்டைபோட்டாலும் அதை பார்ப்பதற்கு கொள்ளை பிரியம்தான்.
ஆனால் இதெல்லாம் காட்டுக்குள் இருக்கிறவரைக்கும்தான். வனப்பகுதியை விட்டு விலங்குகள் ரோட்டுக்கு வந்துவிட்டால்... பொதுமக்கள் கதி அதோகதிதான். இப்படித்தான் திம்பம் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் சாலையில் செய்த அமர்க்களங்களை பார்த்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலாபயணிகள் என ஒட்டுமொத்த பேரும் உறைந்து நின்றனர்.
விலங்குகள் நடமாட்டம்
சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகள் சாலையில் நடமாடி வருவது வழக்கம். இதனால் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியே செல்ல வேண்டாம் எனக்கூறி வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில் திம்பம் மலைப்பகுதியின் 5-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று பட்டப்பகல் நேரத்தில் வாகனங்கள் சென்று கொண்டு சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
சாலையின் நடுவில் சிறுத்தைகள்
அப்போது, இரண்டு சிறுத்தைகள் சாலையின் நடுவில் நடமாடி கொண்டிருந்ததை கண்டு வாகனத்தில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் எல்லாம் அப்படியே சத்தமின்றி நின்றுவிட்டனர். பின்னர் திடீரென்று இரண்டு சிறுத்தைகளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டும், சாலையில் புரண்டும் எழுந்து விளையாட ஆரம்பித்துவிட்டன.
செல்போனில் படம்பிடித்தனர்
இதனால் சாலையின் இரண்டு பக்கத்திலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றுவிட்டன. அங்கிருந்து ஒருவரும் நகர்ந்து பின்னோக்கியும், அந்த இடத்தைவிட்டும் செல்லவில்லை. ஆபத்தை உணராமல் வாகனங்களில் இருந்தவர்கள் சிறுத்தைகள் விளையாடியதை செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர். அதற்குள் தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
ஆபத்தை உணராமல் இருப்பதா?
"சிறுத்தைகள் விளையாடும் இடத்தில் வாகனத்துடன் நின்று கொண்டிருப்பதா? ஏற்கனவே இதே மலைப்பகுதியில் சிறுத்தை தாக்கி 2 பேர் இறந்தது நினைவில்லையா? ஆபத்தை உணராமல் இப்படியா செல்போனில் படம் பிடித்து கொண்டிருப்பதா" என்றும் சத்தம் போட்டு அவர்களை எச்சரித்தனர். இதையடுத்து சிறுத்தைகளை வனப்பகுதியினர் விரட்ட தொடங்கியதும், இரண்டு சிறுத்தைகளும் விளையாடிக் கொண்டே காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டன. சிறுத்தைகள் விளையாடிய காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.