சென்னை சில்க்ஸ் கட்டடம்: 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி, வைர நகைகள் பெட்டகங்கள் மீட்பு!
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 2 பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சென்னை தியாகராயநகர் தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 2 பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 400 கிலோ தங்க நகைகளை மற்றும் 2000 கிலோ வெள்ளி நகைகள் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த தீயை 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தரைமட்டமாக்கப்பட்ட கட்டடம்
2 ஜா கட்டர் எந்திரங்களை பயன்படுத்தி 7 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுக்குமாடிக் கட்டடம் நேற்று முன்தினம் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
2 பெட்டகங்கள் கண்டுபிடிப்பு
இதன் இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 2 பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
400 கிலோ தங்கம்..
அவற்றில் 400 கிலோ தங்க நகைகள், 2,000 கிலோ வெள்ளி நகைகள் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் இருந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகைகள் உருகி இருக்கலாம்
மேலும் தீயில் தங்க வெள்ளி நகைகள் உருகி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டுள்ள இந்த 2 பெட்டகங்களும் 2 மற்றும் 6வது தளத்தில் இருந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.