ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருட்டு.. 2 பணிப் பெண்கள் கைது
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை பணம் திருடியதாக 2 பணிப் பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு, தங்க வைர நகைகள், பணம் திருட்டுப் போனதாக போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பணிப் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்கள் நகை, பணத்தை திருடியதாக தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது வீட்டுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். ஆனால் பாதுகாப்புக்கு மத்தியிலும் இரு பெண்கள் நகை, பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.