அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூட்டி சென்று மாணவி பலாத்காரம்.. விருதுநகரில் கொடூரம்
அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூட்டி சென்று விருதுநகரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
விருதுநகர்: அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூட்டி சென்று விருதுநகரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ராஜபாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவரின் 14 வயது மகள், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருட்களை கொண்டு வரும் ராஜபாளையம் சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து (வயது 28) மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர், மாணவியிடம் 'உனது தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனே அழைத்து வரச் சொன்னார்கள்' என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி, அவரது மோட்டார் சைக்கிளில் ஏறினார். ஆனால் வழிமாறி வேட்டை பெருமாள் கோவில் தெரு வழியாக மோட்டார் சைக்கிள் சென்றதால் மாணவி பயத்தில் கூச்சலிட்டார்.
அப்போது காளிமுத்துவின் நண்பர் விஜயமூர்த்தி அங்கு வந்தார். அவரும் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொள்ள 2 பேரும் மாணவியை கடத்திச் சென்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் சென்றதும், மாணவியை மிரட்டி காளிமுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் மாணவியை மீண்டும் அழைத்து வந்து பள்ளியின் அருகே விட்டு விட்டு காளிமுத்துவும், அவரது நண்பரும் சென்றுவிட்டனர். அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி அழுதுகொண்டே நடந்ததை தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் தென்றல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக காளிமுத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய விஜயமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.