போலி சான்றிதழ் தயாரித்து ஆசிரியரான 2 பேர் அதிரடி கைது - சிக்கலில் மேலும் பலர்!
தர்மபுரி: தர்மபுரியில் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உரிய படிப்பு படிக்காமல் போலி சான்றிதழ் தயாரித்ததும், பணியில் சேருவதற்காக சாதி சான்றிதழிலும் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த கிருபாகரன். இவர் தனது பெயரை செந்தில்குமார் என மாற்றி போலி சான்றிதழை தயாரித்துள்ளார். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ். இவர் தனது பெயரை துரைராஜ் என மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளார்.
இவர்கள் இருவரின் சான்றிதழ்களும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. சான்றிதழ்கள் போலியானவை என தெரிந்ததும் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் மோசடி செய்த மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.