'சிகரம் தொடு' பட பாணியில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் நூதன கொள்ளை முயற்சி
தென்காசி: ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்கின்ற தொழில்நுட்பத்தை மிக நுட்பமாக காட்டிய படம் சிகரம் தொடு. அந்த பாணியில் குற்றாலத்தில் நூதன முறையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலம். இங்கு ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வருகையை கருத்தில் கொண்டு பழைய குற்றாலம் செல்லும் வழியில் பராசக்தி கல்லூரி அருகில் கனரா வாங்கி சார்பில் ஏ.டி.எம்.இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை இந்த இயந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏ.டி.எம்.கார்டு சொருகும் பகுதியில் வித்தியாசமாக ஒரு பொருள் இருந்துள்ளது. இதை பார்த்த அந்த ஊழியர் உடனடியாக வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி கனரா வங்கி மேலாளர் வீரமணி விரைந்து வந்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குற்றாலம் காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையில் போலீசார் விரைந்து வந்து வங்கி அதிகாரிகள் துணையோடு ஏ.டி.எம்.இயந்திரத்தினை ஆய்வு செய்தனர். அப்போது ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்கும் அட்டைகளையும், ரகசிய எண்களையும் படம்பிடிக்கும் அதி நவீன கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதன்பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் நவீன கேமராவை பொறுத்துவது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை வைத்து குற்றாலம் போலீசார் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ள நபர்களை தேடி வருகின்றனர்.