பழிக்குப்பழி.. கை, கால்களை கட்டி கழுத்தறுத்து இருவர் கொலை.. ராமநாதபுரம் அருகே பயங்கரம்!
முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்டனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே முன்விரோதம் காரணமாக காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
வாலாந்தரவை கிராமம் அருகே உள்ளது போலையன் நகர். இப்பகுதியை சேர்ந்த தர்மா மற்றும் பாஸ்கரன் ஆகியோரிடையே கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட விவகாரங்களில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஒருவரையொருவர் தாக்கி கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், செல்வம் என்பவரின் காதணி விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஸ்கரன் தரப்பை சேர்ந்த மணி 30, விஜய் 27, மற்றுமொரு விஜய் 19, ஆகியோர் கலந்துகொண்டனர். விழா முடிந்து விசேஷ வீட்டின் பின்புறம் உள்ள தோப்பில் 3 பேரும் போதையுடன் தூங்க போய்விட்டனர்.
அப்போது, தர்மாவின் தரப்பிலிருந்து அவரது தம்பி கார்த்திக் உள்ளிட்டவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்த மணி, விஜய் ஆகியோரின் பேரின் கை, கால்களை கட்டி கழுத்தையும் அறுத்துள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இதனை கண்ட 19 வயது விஜய் பயத்தில் அலறிதுடித்தார். ஆனாலும் அந்த வெறிபிடித்த கும்பல் அவரையும் விட்டு வைக்காமல் தலையில் அரிவாளால் வெட்டி தப்பி சென்றது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜய் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்க முயன்றனர். அப்போது உறவினர்கள் கொலை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என்று கூறி சடலங்களை கொடுக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.