கோவை அருகே 'சின்னதம்பி'யை கல்வீசி விரட்டி தாக்குதல்.. நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!
அமைதியாக சென்ற யானையை 2 பேர் கல்வீசி தாக்கியுள்ளனர்.
Recommended Video
கோவை: கோவை அருகே அமைதியாக சென்றுகொண்டிருந்த சின்னதம்பி என்ற யானையை இரண்டு பேர் கல்வீசி தாக்கி துன்புறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை துன்புறுத்தும் இந்த வீடியோ காட்சியானது தற்போது வெளியாகி உள்ளதால், இதனை கண்டு விலங்கு நல ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான தடாகம், மாங்கரை, ஆனைகட்டி பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி நாள் தோறும் மலை அடிவார கிராமங்களுக்கு வருவது வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக தடாகம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளதால் அங்குள்ள பனை மர கூலை சாப்பிட யானைகள் நாள்தோறும் வருகிறது.
அவ்வாறு வரும் யானைகள் அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் வழியாக வருவது வழக்கம். மலை படிக்கட்டுகளை கடந்து யானைகள் வருவதால் யானைகளை பார்க்க மாலை நேரங்களில் பொதுமக்கள் வருவது வாடிக்கை. அப்படி வரும் சிலர் யானைகளை அவ்வப்போது சீண்டுவதும் வழக்கம்.
இந்நிலையில் அனுபாவி சுப்பிரமணிய கோவில் அடிவாரத்தில் ஒரு யானை வந்து செல்வதுண்டு. அடிக்கடி வந்து செல்லும் இந்த யானையினை அப்பகுதி மக்கள் சின்ன தம்பி என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் வழக்கமாக கோயில் படிக்கட்டில் வந்த யானையை வயதான முதியவர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் திடீரென்று கற்களை கொண்டு வீசி யானையை விரட்டினர்.
படிக்கட்டில் வரும் யானையை அவர்கள் இருவரும் விரட்டி போக சொல்வதையும், அவ்வாறு செல்லும் யானையை அவர்கள் கல் வீசி தாக்குவதையும் செல்போனில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில் அமைதியாக வரும் யானைகளை இவ்வாறு கல் வீசி தாக்குவதால் கோபமுற்றும் வழியில் செல்லும் பொதுமக்களை யானை தாக்கும் அபாயம் உள்ளதாகவும், யானைகளை சீண்டுவோர் மீதும் கல் வீசுபவர்கள் மீதும் வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.