தந்தை, மகள் எரித்துக்கொலை.. 2 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
தந்தை, மகள் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர்: தந்தை, மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு மரண தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் திருப்பூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தங்கவேல். இவர் செல்வம் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தங்கவேலுவிடம் செல்வம் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2015 ம் ஆண்டு தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்த செல்வம், தங்கவேலுவையும், அவரது மகளையும் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் பல்லடத்தில் தங்கவேலுவை எரித்து கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்கவேலுவின் மகளை கோவைக்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முகமது ஜியாவுதீன், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வம் மற்றும் தங்கராஜ் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் கூலிப்படையை சேர்ந்த தெய்வசிகாமணி ,நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். தந்தையுடன் கடத்தப்பட்ட சிறுமி, தந்தையின் கொலைக்கு சாட்சியாகி விடகூடாது என்பதற்காக சிறுமி என்றும் பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரையும் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க சிறுமியின் சடலத்தை எரித்த இந்த கொடூர சம்பவம் அரிதிலும் அரிதான வழக்காக கருதி இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார் .