குடலுக்குள் மறைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!! கோவை விமான நிலையத்தில் இருவர் கைது!!
கோவை: குடலுக்குள் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 16 தங்கக்கட்டிகளை மறைத்து கடத்திவந்த இருவரை கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, இரண்டு பேர் கொண்டுவந்த பொருட்களை சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை.
எனினும், அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்ட அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்ததில் இருவரும் தங்களது குடலுக்குள் தலா 8 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஒரு கிலோ 856 கிராம் எடை கொண்ட அந்த 16 தங்கக்கட்டிகளின் இந்திய மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்நாசர், ஷாஜஹான் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.