நெல்லை அருகே தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையர்கள் - விரட்டி பிடித்து கைது
பாப்பாக்குடி அருகே தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: பாப்பாக்குடி அருகே தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த 2 இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று மதியம், பாப்பாக்குடி பகுதியில் ரேணுகா என்ற பெண் தனது கணவர் சுரேஷுடன் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை 2 இளைஞர்கள் திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரேணுகா அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றம் கையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசாருக்கு உடனடி தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க மைக் மூலமும் நகரெங்கும் உஷார்படுத்தப்பட்டது. அப்போது திருமலையப்பபுரத்திலிருந்து முதலியார்பட்டி சாலையில் பைக்கில் சென்ற கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் கொள்ளையர்கள் போலீசாரை கண்டதும் பைக் - மற்றும் பணத்தை கீழே போட்டு விட்டு அருகிலிருந்த வயல் பகுதிக்குள் குதித்து தப்பி ஓடினர். எனினும் போலீசார் விரட்டி சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் நெல்லை ராமையன் பட்டியை சேர்ந்த முத்துக்குமார் 24 ம், ராஜேஷ் 21, என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இருவரும் முக்கூடல், பணகுடி பகுதிகளில் நகை பறிப்பில் ஏற்கனவே ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.