எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை : நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கிய படகை சோதனை செய்தபோது இலங்கை யாழ்பானத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்ரீராஜ் மற்றும் யசாந்தன் அதில் இருந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்தாகவும், வழி தவறி இங்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.' இதனையடுத்து 2 இலங்கை மீனவர்களையும் வேதாரண்யம் கடற்கரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மீனவர்கள் இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்ற தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் சந்திரன் முன் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் இருவரையும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் இருவரும் அடைக்கபட்டனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.