மாணவியின் உயிருக்கு உலை வைத்த வேதியியல் தேர்வு... மறு தேர்வு நடத்துமா அரசு?
கன்னியாகுமரி: வேதியியல் தேர்வு சரியாக எழுதாக காரணத்தால் ப்ளஸ் டூ மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்தாக கூறும் ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த தேர்வினை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பிளஸ்-2 தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்ததோடு, 100 மார்க் வருவதே கடினம்தான் என்றனர். இதற்கு முன், பள்ளி தேர்வுகளில் கேட்கப்படாத கேள்விகள் எல்லாம் வினாத்தாளில் இடம்பெற்றதாகவும், அதற்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கெமிஸ்ட்ரி எல்லாம் ரொம்ப ஈஸி செண்டம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்த மாணவர்கள் எல்லாம் தேர்வு அறையில் கேள்வித்தாளை வாங்கிப்பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். காரணம் எந்த கேள்வியுமே நேரடியாக கேட்கப்படவில்லை என்பதுதானாம்.
சென்னையில் பல பள்ளிகளில் தேர்வு அறையை விட்டு வெளியே வந்த மாணவர்கள் கேள்வித்தாளை கிழித்து எரிந்தனர். ஒருசில தேர்வு மையங்களில் தேர்வறையை விட்டு வெளியே வந்த மாணவி கள் தேர்வு கடினமாக இருந்ததால் கண்ணீர் வடிந்தபடி வந்தனர்.
குமரியில் ஒரு மாணவி வேதியியல் தேர்வை சரியாக எழுதாததால் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கருங்கல் அருகே உள்ள அழகாமணிநகர் பட்டவிளையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகள் ஜெதர்சினி, 17. வேலை காரணமாக ஜெயராமன் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வருகிறார். மாணவி ஜெதர்சினி அழகாமணி நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வேதியியல் தேர்வு முடிந்து ஜெதர்சினி வீட்டுக்கு வந்துள்ளார். தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது பாட்டி கேட்டபோது, வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாகவும், தான் சரியாக தேர்வு எழுதவில்லை எனவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது அவரிடம், மதிப்பெண் குறைந்தாலும் பரவாயில்லை, இதற்காக மனவேதனை அடைய வேண்டாம் என அவருடைய பாட்டி கூறி தேற்றி உள்ளார். ஆனாலும், ஜெதர்சினி ஆறுதல் அடையவில்லை.
இரவில் குளியல் அறைக்கு சென்ற அவர், மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது. அப்போது வலிதாங்க முடியாமல் அலறிய ஜெதர்சினியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் மாணவி ஜெதர்சினி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் தேர்வு சரியாக எழுதாத காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த ஆண்டு வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக வேதியியல் ஆசிரியர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பாடப்புத்தகம் 2006ம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்த பாடப்புத்தகத்தில் இருந்து பல பொதுத் தேர்வுகளுக்கு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை கேட்காத எந்த வினாக்களிலும் இல்லாதவைகளாக பார்த்து கேட்டுள்ளனர் என்பது ஆசிரியர்களின் கருத்தாகும்.
கேள்வி கேட்டவர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து இப்படி கடினமாக கேட்டால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வேதியியல் தேர்வெழுதிய பெரும்பாலான மாணவ-மாணவி கள் தேர்வு கடினமாக இருந்ததாக கூறுவதால், இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழிற் கல்வி படிப்புகளுக்கு கட் ஆப் மதிப்பெண் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித தேர்வும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.
அதேபோல வேதியியல் தேர்வினை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்பது ப்ளஸ் டூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாகும். பள்ளிக்கல்வித்துறையும், அரசும் என்ன செய்யப்போகிறது?