செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சென்ற மாணவர் பலி.. மற்றொருவர் மாயம்..
பள்ளிக் கூடத்தில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் ஊற்றச் சென்ற மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தூத்துக்குடி: பள்ளி கூடத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சென்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் இறந்ததால் மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது அருணாசலபுரம். அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சூர்யா, சேர்மதுரை. இவர்கள் அருகே உள்ள கீழச்சாரல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தினமும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பிடித்து ஊற்றுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கம் போல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற இருவரும் சைக்கிளில் சென்றனர்.மாணவர்கள் இரண்டு பேரும் பள்ளி கூட நிர்வாகியின் வீட்டில் போய் பள்ளியின் முன் புற கேட்டின் சாவிவை வாங்கினர். சைக்கிளை பள்ளி கூட வளாகத்தில் நிறுத்தி பூட்டிவிட்டு கேட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளனர். பின்னர் அவர்களை காணவில்லை. பள்ளிக்கு சென்றவர்கள் மாலை 6 மணி வரை வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக் கூடத்திற்கு சென்று தேடினர்.
பள்ளியின் சாவியும், சைக்கிளும் அந்த இடத்தில் இருந்ததால் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டயபுரம் தாசில்தார் பாக்கியலெட்சுமி, கோவில்பட்டி கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மாணவன் சேர்மத்துரை கிணற்றில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. ஆனால் மற்றொரு மாணவன் சூர்யாவின் கதி என்ன என்பது தெரியவில்லை. அங்கு இன்னும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.