செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 பேர் மாணவர்கள் பலி - பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபரீதம்
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்: நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாட செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாங்காடு, அம்பாள் நகரை சேர்ந்தவர் கவுதம் 18, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் திலக் 18. இருவரும் போரூர் அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈ.சி.ஈ., முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
இன்று இவருடன் கல்லூரியில் படித்து வந்த நண்பரான விக்னேஷ் என்பவருக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாட 7 பேர் செம்பரம்பாக்கம் எரிக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஏரிக்குள் இறங்கி கவுதம், திலக் ஆகியோர் குளித்துள்ளனர். இதில் கவுதம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அதனால் அவரை காப்பாற்ற அவரது நண்பர் திலக் சென்றார்.
ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். இதையடுத்து கரையில் இருந்த அவரது நண்பர்கள் செய்வது அறியாமல் கதறினார்கள். இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்து போன மாணவர்களின் உடல்களை தேடும் பனியில் ஈடுபட்டனர்.
இதில் நீண்ட நேர தேடுதலுக்குப்பின் கவுதம் உடலை மட்டும் மீட்டனர். தொடர்ந்து திலக் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் சென்ற போலீசார் மீட்கப்பட்ட கவுதம் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்தநாள் விழா கொண்டாட நண்பர்களுடன் குளிக்க சென்ற போது இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.