படிக்கும் பிள்ளைகளை உங்களுக்கு குடை பிடிக்க வைக்கலாமா ஆசிரியர்களே!
மாணவிகளை குடை பிடிக்க வைத்த விவகாரம் தற்போது வெடித்துள்ளது.
Recommended Video
அரக்கோணம்: பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஆசிரியை அமர்ந்து அதைப் பார்வையிடுகிறார். அவருக்கு குடை பிடித்தபடி வெயிலில் நிற்கிறார் ஒரு மாணவி. சர்ச்சையாகியுள்ளது இந்த செயல்.
அரக்கோணத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னாடி விளையாட்டு போட்டி பள்ளி கல்வி விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளும் பங்கேற்றிருந்தனர். போட்டி தொடங்கியது. 2 ஆசிரியைகளுக்கு உட்கார சேர் போடப்பட்டது. போட்டி நடப்பது மைதானம் என்பதால் வெயில் சுளீர் என அடித்தது.
அதனால் 2 டீச்சர்களும் அந்த சேரில் உட்கார்ந்து கொண்டு, 2 மாணவிகளை அழைத்து தங்களுக்கு குடை பிடியுங்கள் என்று சொன்னார்கள். ஒரு விளையாட்டு போட்டி முடிய குறைந்தது 3 மணி நேரமாவது ஆகாதா? இந்த 2 மாணவிகளும் ஆசிரியைகளுக்கு போட்டி முடியும் குடையை பிடித்தே நின்றனர். இந்த குடைபிடித்த சம்பவம் வீடியோவாகவும், போட்டோவாகவும் விறுவிறுவென பரவியது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
கடைசியில் அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அப்போது, அந்த 2 டீச்சர்களின் பள்ளிகள் கண்டறியப்பட்டு, அந்த பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவழியாக டீச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்று நம்பி கொண்டிருந்தால், மீண்டும் ஒரு சம்பவம் வேலூரில் மறுநாளே நடந்துள்ளது.
கொளுத்தும் வெயில்
நேதாஜி மைதானத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. அப்போதும் வெயில் செம போடு போட்டது. இந்த போட்டிக்கு நடுவர் ஒரு ஆசிரியை. மைதானத்தில் போட்டி என்பதால் நிழல் எங்கேயும் கிடையாது. அங்கிருந்த மாணவிகளை அழைத்து தனக்கு குடை பிடிக்குமாறு கூறினார்.
குடைபிடித்த மாணவிகள்
வெயிலில் நின்றவாறே டீச்சருக்கு குடைபிடித்தனர் மாணவிகள். அந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த பெற்றோருக்கெல்லாம் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் குடை பிடித்த மாணவிகளின் பெற்றோர்களோ இன்னும் பாவம். மற்ற மாணவ, மாணவிகள் விளையாட்டை பார்ப்பதைவிட்டு விட்டு இந்த ஒரு டீச்சரையே வெறித்து பார்த்து கொண்டிருந்தார்கள். இதுவும் சமூகவலைதளங்களில் வைரலாகியது. இப்படி அடுத்தடுத்து ஆசிரியைகள் மாணவிகளை குடை பிடித்த சம்பவம் கல்வி துறையை சர்ச்சையில் இழுத்து வந்து போட்டது. இந்த பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி தந்தது என்ன?
கல்வித்துறை என்ன கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் அது தீர்வு கிடையாது. அது துறை ரீதியான ஒரு செயல். அவ்வளவுதான். அந்த நடவடிக்கை அவசியம்தான். ஆனால் இந்த ஆசிரியைகளின் அடிப்படை குணம் மாறுவதுதான் மிக முக்கியம். மனதையும், அறிவையும், ஒன்றிணைத்து பார்க்கும் பக்குவமும் முதிர்ச்சியும் இல்லாவிட்டால் என்ன படித்து என்ன பயன்?