வாகன ஓட்டியிடம் கட்டணம் கேட்டபோது விபரீதம்.. செங்கல்பட்டு டோல்கேட் ஊழியர்கள் 2 பேருக்கு கத்திகுத்து
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகேயுள்ள டோல்கேட்டில் வாகன ஓட்டிகளுடன் ஏற்பட்ட தகராறில் டோல்கேட் ஊழியர்கள் இருவருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
டோல்கேட் ஊழியர்களான மாவீரன், தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கத்தியால் குத்திய இருவரை செங்கல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர். சுங்க கட்டணம் தர மறுத்த வாகன ஓட்டிகளுடன், டோல்கேட் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு லாரிகள் உள்ளிட்ட டோல்கேட்டுகளை அடிக்கடி பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், சமீபகாலங்களில், சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் தகராறுகள் அதிகரித்து வருகிறது. இப்படித்தான் இன்றும் அதிக கட்டணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, அது கத்திக்குத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு டோல்கேட்டில் வாகன ஓட்டிகள் மற்றும் டோல்கேட் ஊழியர்கள் நடுவே ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது.