ஆடிட்டராவதே என் விருப்பம் - +2 "டாப்பர்" பவித்ராவின் கனவு!
கோவை: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பவித்ரா சி.ஏ படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பவித்ரா என்ற மாணவி 1200 க்கு 1192 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதே போன்று நிவேதா என்ற மாணவியும் 1192 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.
ஆடிட்டராக விருப்பம்:
தன்னுடைய வெற்றி குறித்து பவித்ரா, "நான் ஆடிட்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கவுண்டன்சி குரூப்பை தேர்வு செய்துபடித்தேன்.
10ம் வகுப்புக் கனவு இது:
மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதன் மூலம் அதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
எதிர்ப்பார்ப்பில்லா வெற்றி:
ஆனால் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். எனவே பிளஸ் 2 தேர்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தேன்.
சி.ஏவில் சாதனை படைப்பேன்:
ஆனால் இப்போது நான் எதிர்பாராதது நடந்திருக்கிறது. கண்டிப்பாக சி.ஏ. படித்து சாதனை படைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.