சென்னையில் விபத்து... தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி பலி
சென்னையில் ரயில் மோதி 2 பேர் உடல் நசுங்க பலியானார்கள்.
Recommended Video
சென்னை: தண்டவாளத்தை கடக்கும்போது, மின்சார ரெயில் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை மாதம்தான் ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரயில்நிலைய தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தனர்.
ரயில்வே பயணிகள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே நிர்வாகமும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பல்வேறு தடுப்பு, மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ரயில் பயணிகளை கண்காணித்து வருகிறது. அதேபோல, சென்னை மட்டுமல்லாமல், புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களிலும், தண்டவாளத்தை பயணிகள் யாரும் கடக்க கூடாது என்று பல வருடங்களாகவே சொல்லி வருகிறது.
பயணிகளின் அலட்சியம்
தண்டவாளத்தை கடந்து எண்ணற்ற உயிர்பலிகள் ஏற்பட்டதால்தான் நடைமேம்பாலங்களே அதிகமாக கட்டப்பட்டன. எனவே தண்டவாளங்களை பயணிகள் கடக்காமல், நடைமேம்பாலங்களைதான் பயன்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பயணிகளின் அலட்சியம், அவர்களது உயிரையே காவு வாங்கி செல்கிறது.
2 பேர் பலி
இன்று காலையும் ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சென்னை சைதாப்பேட்டை-கிண்டி இடையே 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தடுப்பு சுவர்
இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என்பதால் இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வகையில் ரயில் நிலையங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது பலமாக எழுந்துள்ளது.