முக்கொம்பு அணை சீரமைப்பின்போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் சீரமைப்பு பணியின் போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து முக்கொம்பு அணைக்கு குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டடப்பட்ட இரும்பு பாலத்தின் தூண்கள் சேதமடைந்ததால் பாலம் உடைந்தது.
இதையடுத்து முக்கொம்பு கொள்ளிடம் கதவணையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கதவணையில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது இரு பணியாளர்கள் இருந்த படகில் திடீரென என்ஜின் பழுதானதால் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து மீனவர்களின் படகு மூலம் அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.