திருப்பூர் அருகே வேன் குப்புற கவிழ்ந்து விபத்து.. 2 பெண்கள் பரிதாப பலி.. 21 பேர் படுகாயம்!
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியானார்கள்.
Recommended Video
திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென்று குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் அருகே உள்ள பகுதி காளிபாளையம். இங்கு தனியார் பனியன் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வழக்கமாக வேனில்தான் காலையில் வேலைக்கு வருவது வழக்கம்.
அதுபோலவே, இன்றும் ஒரு வேனில், ஆண்கள், பெண்கள் என 23 பேர் அந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்துகொண்டிருந்தனர். மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வேன் வந்துகொண்டிருந்தபோது, சாலையில் இருந்த ஒரு கல் மீது வேன் ஏறியது. இதில் எதிர்பாராதவிதமாக வேனின் முன்பக்க டயர் டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அலறினர். இந்த இடிபாட்டில், பாப்பாத்தி என்ற 50 வயது பெண்ணும், பார்வதி என்ற 38 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவருமே வேறு வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
வேனில் பயணம் செய்த 21 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.