ஆசிரியருடன் காதல்.. பள்ளி வளாகத்தில் சண்டை போட்டு கட்டி உருண்ட 2 ஆசிரியைகள்
விழுப்புரம்: ஆசிரியர் ஒருவருக்காக அதே பள்ளியில் பணி புரியும் இரு சக ஆசிரியைகள் கட்டிப் பிடித்து சண்டை போட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இலவாசனுர்கோட்டையிலுள்ள அரசு ஆண்கள் ்மேல்நிலை பள்ளியில்தான் இந்த பெரும் கூத்து நடந்துள்ளது.
இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய விஜயகாந்த் என்பவரும் சக ஆசிரியை புவனேஸ்வரியும் காதலர்களாம். சமீபமாக சில நாட்கள், இருவருக்கும் இடையே ஏதோ ஊடல் போன்ற தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், காதலர்கள் பேசிக்கொள்ளாமல் முறைத்தபடி சுற்றியுள்ளனர்.
இதை அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும், தமிழ் மகள், என்பவர் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவர் நைசாக விஜயகாந்த்துடன் நெருக்கம் காட்டி பழகியுள்ளார். காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதை புவனேஸ்வரி அறிந்து கொண்டார். விஜயகாந்த் மற்றும் தமிழ் மகளிடம் இதுபற்றி சொல்லி, பிரிந்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் தமிழ் மகள் விஜயகாந்த்தை விடாமல் சுற்றி வந்தார்.
இதுதொடர்பாக பள்ளி வளாகத்தில் புவனேஸ்வரி மற்றும் தமிழ் மகள் நடுவே இரு நாட்கள் முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதை மாணவர்கள், சக ஆசிரியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சில பொதுமக்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர். அதற்குள் புவனேஸ்வரி தனது உறவினர்களுக்கு இதுபற்றி தகவல் அனுப்பினார். புவனேஸ்வரியுன் உறவினர்கள் சுமார் 50 பேர் குபு குபுவென அங்கு வந்து குவிந்தனர்.
தமிழ் மகள் மற்றும் விஜயகாந்த்துக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். போலீசார் தலையிட்டு அவர்களை விரட்டிவிட்டனர். மாவட்ட முதண்மை கல்வி அலுவலர் முனுசாமிக்கும் இந்த தகவல் புகாராக தெரிவிக்கப்பட்டது.
முனுசாமி உத்தரவின் பேரில் உதவி தொடக்க அலுவலர் நீலாம்பாள், தலைமை ஆசிரியர் ஐயூப்கான் ஆகியோர் தலைமையில் சம்பவம் பற்றி அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் தவறு நிரூபணம் ஆனதால், 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேநேரம், மாணவ, மாணவிகளின் பெற்றோர், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, இது பள்ளிக்கூடமா வேறு எதுவுமா, இதை பார்த்தால் எங்கள் பிள்ளைகளும் கெட்டுப்போய்விடுவார்களே, இதற்காகவா ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் பெரிய விஷயம் இல்லை. சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள்.