மதுரையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி!
மதுரை : மதுரையில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மதுரை-தேனி சாலையில் உள்ள ஹெச்.எம்.எஸ். காலனியில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியில் கழிவுநீரை அகற்றுவதற்கு 2 மோட்டார் பைபர்கள் உள்ளன. இவை பழுதடைந்துள்ளதால், கழிவுநீரை அகற்றுவதற்கு தற்காலிக ஒப்பந்த பணியாளர்களான மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த விசு ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்கு தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அவர்களை விஷவாயு தாக்கியதில், மூச்சு திணறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் கதிரவன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்குவதாகவும், நாளைக்குள் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும்,விரிவான விசாரணை நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.