2000 கோடியில் 20 ஆயிரம் குடிசைமாற்று வாரிய வீடுகள்… ஜெயக்குமார் அறிவிப்பு
2000 கோடி ரூபாயில் 20 ஆயிரம் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
இதில் குடிசை மாற்று வாரிய கட்டடங்கள் கட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதில் குடிசை மாற்று வாரியத்தால் 20 ஆயிரம் வீடுகள் ரூ.2,000 கோடியில் கட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரூ. 3,250 கோடி ரூபாயில் ஒரு லட்சம் வீடுகளை பயனாளிகளே கட்டிக் கொள்ளும் வகையில் அரசு நிதியுதவி வழங்கும் என்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இதுதவிர குடிசைமாற்று வாரிய பழைய வீடுகளை மறுகட்டுமானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரிய வீடுகளை மறுகட்டுமானம் செய்வது குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்தார். அந்த வேலைகளையே குடிசைமாற்று வாரியம் இன்னும் செய்து முடிக்காத நிலையில், தற்போது நிதி அமைச்சர் ஜெயக்குமார் புதியதாக அறிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு செயல்பாட்டிற்கு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.