20,000 ஆட்டோக்கள் மீட்டர் திருத்தப்படவில்லை… மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
சென்னை: சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் திருத்தம் செய்ய கடைசிநாள் நவம்பர் 15 என்பதால் நேற்று ஒரே நாளில் 1000 ஆட்டோக்கள் மீட்டர்கள் திருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் புதிய ஆட்டோ கட்டணம் கடந்த ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய கட்டண அட்டைகள் வினியோகிக்கப்பட்டன.
கட்டணத்தின்படி மீட்டர்களை திருத்தி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சான்றிதழ் பெற அக்டோபர் 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஒரு மாதம் அதாவது நவம்பர் 15ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
ஆட்டோ மீட்டர்கள்
சென்னையில் ஓடும் 71 ஆயிரம் ஆட்டோக்களில் இதுவரை 44,369 ஆட்டோக்களில் மட்டும் மீட்டர் திருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 ஆயிரம் ஆட்டோக்களில் மீட்டர் திருத்தப்படவில்லை. மீட்டர் திருத்தம் செய்வதற்கான வரும் வெள்ளிக்கிழமையுடன் காலக்கெடு முடிகிறது.
கெடு முடிய இன்னும் 2 நாட்களே இருப்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆட்டோக்கள் நிரம்பி இருக்கின்றன.
ஆர்.டி.ஓ அலுவலகம்
மெக்கானிக்குகளிடம் மீட்டரை திருத்தி சீல் வைக்கப்பட்டு அதன் பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் அதனை காண்பித்து கட்டணம் திருத்தம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்து மேலும் ஒரு ‘சீல்' ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைக்கப்படுகிறது.
1000 ஆட்டோக்கள்
இந்த அத்தாட்சியை பெற்று கொண்டு தான் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். வழக்கமாக தினமும் 400 ஆட்டோக்கள் மீட்டர் திருத்தம் செய்ய கொண்டு வரப்பட்டது.
ஆனால் புதன்கிழமையன்று ஒரு நாளில் மட்டும் 969 ஆட்டோக்களுக்கு மீட்டர் திருத்தி ‘சீல்' வைக்கப்பட்டுள்ளது.
20000 ஆட்டோக்கள் பாக்கி
வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தை சேர்ந்துள்ள 16 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை 65084 ஆட்டோக்கள் கட்டண அட்டை பெற்றுள்ளன.
கட்டண அட்டை பெற்றவர்களில் 20715 பேர் இன்னும் மீட்டர் திருத்தம் செய்யவில்லை. மொத்தமுள்ள ஆட்டோக்களில் 6000 பேர் இதுவரை கட்டண அட்டை பெறாமல் உள்ளனர்.
கட்டண அட்டையும் இல்லை
தொடர் நடவடிக்கையால் 44,369 ஆட்டோக்களில் மீட்டர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்டோக்களில் இந்த 2 நாட்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. 6 ஆயிரம் ஆட்டோக்கள் கட்டண அட்டை பெறாமல் உள்ளன. இந்த ஆட்டோக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் அரசு வங்கிகளில் கடன் பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.
கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வைத்திருக்கலாம். இதுபற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம்.
ஆட்டோக்கள் பறிமுதல்
மீட்டர் திருத்தப்பட்ட ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? மீட்டர் போடாமல் இயக்கப்படுகிறதா? என்பதை கண்டுபிடிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. இது தவிர 5 மொபைல் குழுக்களும் ரகசியமாக செல்கின்றன.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீதும், மீட்டர் இயக்கப்படாமல் செல்லும் ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காலக்கெடு நீடிக்குமா?
மீட்டரை திருத்த 15-ந்தேதி கெடு முடிகிறது. ஆனால் அன்று மொகரம் பண்டிகைக்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு நாள் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை மீட்டரை திருத்தம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
பேரம் பேசும் ஆட்டோக்கள்
கட்டண அட்டை, மீட்டர் திருத்தம் என கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்தாலும் சென்னையில் இன்னமும் பல ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி கொள்ளையடிக்கின்றனர் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.