நாகர்கோவிலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக பணியமர்த்தபட்ட தமிழகம், பீஹார் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் உட்பட 20 பேரை குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் செல்லஸ் என்பவர் ஆப்பிள் நெட் என்ற பெயரில் மீன் வலை உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கொடுமைபடுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று அங்கு சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது தமிழகத்தை சேர்ந்த ஏழு பேரும், பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 13 பேரும் அங்கு கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆறு பேர் குழந்தை தொழிலாளர்கள் என தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கபடாமல் கொடுமைப்படுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை மீட்ட அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தனியார் வலை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் இங்குள்ள தனியார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு அங்கு பணி புரியும் குழைந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.