விற்பனைக்கு வந்த 231 மாடுகள்- 20 லாரி டிரைவர்கள் கைது; மீட்கப்பட்ட மாடுகள் கோசலைக்கு அனுப்பி வைப்பு
ஈரோடு: ஈரோட்டில் 231 மாடுகளை ஏற்றி வந்த 20 லாரி டிரைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், மீட்கப்பட்ட மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, பசு மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த சந்தையிலிருந்து கறவைக்காகவும், இறைச்சிக்காகவும் மாடுகளை வாங்கி, கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.
நேற்று காலை 9 மணிக்கு, கோவை மிருகவதை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த துளசிமணி என்பவர் தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர், சங்ககிரி-பள்ளிபாளையம் பிரிவு சாலையில் காரில் காத்திருந்தனர். அப்போது கருங்கல்பாளையத்திலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் கோவை மிருகவதை தடுப்பு பாதுகாப்பு அமைப்பு சேர்ந்த துளசிமணியிடம் புகார் பெற்று 20 லாரிகளையும், லாரிகளில் இருந்த 231 மாடுகளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்.
லாரி டிரைவர்கள் 20 பேர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரவு 8 மணிக்கு சங்ககிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி லாரி ஓட்டுனர்கள் 20 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
காலையிலிருந்து இரவு 10 மணி வரை மாடுகளுக்கு தீவனமும், தண்ணீரும் கொடுக்காததால் மாடுகளை வாங்கி செல்லும் வியாபாரிகள் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்ககிரி டி.எஸ்.பி., கந்தசாமி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று அனைவரையும் அப்புறப்படுத்தினர்.
இதனால், அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை கும்பகோணத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பிவைத்தனர்.