20 ரூபாய் நோட்டு... ஆர்.கே நகர் தொகுதிவாசிகளை அசரடிக்கும் பொங்கல் வாழ்த்து போஸ்டர்
சென்னை: இந்திய தேர்தல் வரலாற்றில் புது மாதிரியாய் இப்போது நோட்டையே டோக்கனாக கொடுத்த கதை தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அதை வைத்து பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம், தொகுதியில் சுற்றிய 10 ஆயிரம் ரூபாய்க்கான 20 ரூபாய் அட்வான்ஸ் டோக்கன்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கெல்லாம் அசராமல் பதில் சொன்னார் தினகரன்
கடன் சொல்லி வெற்றி பெற வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றும் கூறினார் தினகரன். டிடிவி தினகரன் பெற்ற வெற்றி, ஆளுங்கட்சியான அதிமுகவையும், வலுவான எதிர்க் கட்சியான திமுகவையும் திக்குமுக்காட வைத்துள்ளது.
ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கனை இன்னமும் பலர் பத்திரமாக வைத்துள்ளனர். டோக்கனுக்குப் பணம் கேட்டுப் போன இடத்தில் மஸ்கோத் அல்வா பொட்டலமும் சில இடங்களில் அடியும் கிடைத்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் அதிமுகவினர் ஒட்டிக்கொண்டிருக்கும் போஸ்டர்கள், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில், அம்மாவின் நலத்திட்டங்கள் இல்லாத இல்லங்கள் இல்லை. ஆனாலும், இதயத்தைத் தொலைத்த எங்கள் ஆர்.கே.நகர் தொகுதி இனிய மக்கள், இருபது ரூபாயை மட்டும் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும், எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அப்போ 20 ரூபாய்க்கு இனி பத்தாயிரம் கிடைக்காதா? அல்வாதானா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர் ஆர்.கே. நகர் மக்கள்.
ஆர்.கே. நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.