சாலையில் வீசப்பட்ட காலவதி சாக்லேட் சாப்பிட்டு 200 மாணவர்கள் வாந்தி - மருத்துவமனையில் அனுமதி
சாலையோரம் கிடந்த காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட 200 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்: தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இரு பள்ளிகளிலும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த 2 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் வீடுகளில் இருந்து கூத்தக்குடி ரயில்வே கேட் வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரத்தில் பெட்டிகளில் சாக்லேட்கள் கொட்டப்பட்டு கீழே கிடந்துள்ளன. இதை எடுத்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். மேலும் சிறிது சாக்லேட்டுகளை கையில் எடுத்து கொண்டு அந்தந்த பள்ளிக்கு சென்றனர். அதை மேலும் சில மாணவர்களுக்கும் கொடுத்தனர்.
நேரம் செல்லச் செல்ல சாக்லேட் சாப்பிட்ட மாணவர்கள் பலரும் வாந்தி எடுத்தனர். பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் விசாரித்தபோது சாலையோரத்தில் கிடந்த சாக்லேட்டுகளை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக மாணவர்கள் கூறினர். சாக்லெட்டுகளை பார்த்தபோது, அவை அனைத்தும் காலாவதியானவை என்பது தெரிந்தது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்குள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு இடவசதி இல்லாததால் 50க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளியிலேயே மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவர்கள் மொத்தமாக வாந்தி எடுத்து மயக்கமடைந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பெற்றோர்கள் அனைவரும் பள்ளியிலும் மருத்துவமனை முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலாவதியான சாக்லெட்டுகளை வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசாரும், அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதியான சாக்லேட்டை பெட்டியுடன், அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் சென்றது அதிகாரிகளுக்கு தெரிந்தது. கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கூத்தக்குடி கிராமத்தில் ஊராட்சி பணியாளர்கள் மூலம் தண்டோரா போட்டு, சாலையோரத்தில் கிடந்த சாக்லேட்டை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.