கும்பகோணம் தீ விபத்து வழக்கு: பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் - 8 பேருக்கு 5 ஆண்டு சிறை
தஞ்சாவூர் : 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனரான புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பள்ளி தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், கட்டிட பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.
நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் 94 குழந்தைகளின் உயிரை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேரில், 11 பேரை விடுதலை செய்த தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மீதம் உள்ள 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
குற்றவாளிகள் யார் யார்?
ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆர். பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை
இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை பிற்பகலில் நீதிபதி அறிவித்தார். அதன்படி, முதல் குற்றவாளி பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ரூ. 51 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் சிறை
பள்ளி தாளாளர் சரஸ்வதி, முதல்வர் சாந்தலட்சுமி, சத்துணவு ஊழியர்கள் வசந்தி, விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையும் அபராதமும்
அதிகாரிகள் பாலாஜி, சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ் ஆகியோருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் சிறை
கட்டிட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ52.57 லட்சம் அபராதம்
பழனிச்சாமி தவிர எஞ்சிய 9 பேரும் ரூ1.57 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். மொத்தமாக இந்த வழக்கில் ரூ52.57 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. இத்தொகையானது இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருச்சி சிறையில் அடைப்பு
தீர்ப்பும் தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
குழந்தைகளுக்கு நிவாரணம்
அபராத தொகையான ரூ. 52 லட்சத்து 57 ஆயிரத்தில், தீவிபத்தில் பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், படுகாயமடைந்த 15 பேருக்கு ரூ. 25 ஆயிரமும், லேசான காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.