2011 தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: நவ.7-ல் ஸ்டாலின் மீண்டும் ஆஜராக உத்தரவு
2011ஆம் ஆண்டு தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 7ம் தேதி மீண்டும் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கடந்த 2011ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்க சைதை துரைசாமி தொடுத்த வழக்கில் இன்று ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
2011ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அதன் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற்ற நிலையில், மு.க. ஸ்டாலின் 2 ஆயிரத்து 734 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மேலும், மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்ததால் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வேணுகோபால் முன்பு மு.க. ஸ்டாலின் ஆஜரானார். அவரிடம் பல கேள்விகளை நீதிபதி கேட்டார். அதற்கு ஸ்டாலின் தான் தேர்தல் விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்றும், அனுமதி பெற்றே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் என்றும், கூறினார். இதனை அடுத்து, வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைனயடுத்து இந்த வழக்கு தொடர்பாக 3வது முறையாக மு.க. ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 25ம் தேதி இதே வழக்கு தொடர்பாக ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.