பிளாஷ்பேக் 2014... 61 உயிர்களை மண்ணுக்குக் காவு கொடுத்த மவுலிவாக்கம்...!
சென்னை: சென்னை அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் ஒன்று கடந்த ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 61 பேர் மண்ணோடு புதைந்து பலியானார்கள். தென்னிந்தியாவில் நடந்த மிகப்பெரிய கட்டிட விபத்து என இதை மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
2014ம் ஆண்டின் மத்தியில் தமிழகத்தை அதிர வைத்த, சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் இது.
சென்னை அருகே மவுலிவாக்கத்தில், போரூர்-குன்றத்தூர் சாலையில் பிரைம் சிருஸ்டி என்ற நிறுவனத்தால் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. அப்போது கட்டடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.
முதலில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தொடர் விசாரணையில் பல பூதாகர உண்மைகள் வெளிவந்தன. இத்துயர சம்பவம் மூலம் கட்டிட நிறுவனங்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அதே போல், வீடு வாங்க நினைக்கும் மக்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வும் உண்டானது.
மீட்புக் குழு...
கிட்டத்தட்ட 7 நாட்கள் நடந்த மீட்புப் பணியில் தமிழக தீயணைப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, தமிழக காவல்துறையின் கமோண்டோ வீரர்கள், மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆகியோர் கொண்ட மீட்புக் குழு என மொத்தம் சுமார் 1,500 வீரர்கள் ஈடுபட்டனர்.
மோப்ப நாய்கள், நவீன கருவிகள்...
இடிபாடுகளிடையே சிக்கி இருப்பவர்களை கண்டறிய 20 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. அதோடு நவீன கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. முடிந்தவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியாக மீட்புப்பணி நிதானமாகவே மேற்கொள்ளப் பட்டது. தொடர் மழையும் மீட்புப் பணிக்கு இடையூறாக அமைந்தது.
61 பேர் பலி..
இந்த கட்டிட விபத்தில் 27 பேர் உயிருடன், 61 பேர் சடலமாகவும் மீட்கப் பட்டனர். இறந்தவர்களில் 41 பேர் ஆண்கள், 20 பெண்கள். இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 25 பேர் ஆந்திரத்தையும், 10 பேர் தமிழகத்தையும், 4 பேர் ஒடிஸாவையும் சேர்ந்தவர்கள்.
சவாலான மீட்புப் பணி...
மீட்புப்பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணர்ச்சிகரமான சம்பவங்கள்...
உயிருடன் மீட்கப் பட்ட இளைஞர் ஒருவர் தனது செறுப்பை தேடியது, சகோதரியின் மோதிரத்தைக் கொண்டு சிதைந்த உடலை அடையாளம் காட்டியது, உறவுகளை இழந்தவர்கள் சிலர் தங்களுக்கு புதிய உறவுகளை அமைத்துக் கொண்டது என இந்த கட்டிட விபத்து பகுதியில் நடந்த பல உணர்ச்சிகரமான சம்பவங்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.
மற்றொரு கட்டிடத்திற்கு சீல்...
இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகிலேயே மற்றொரு 11 மாடிக் கட்டிடமும் கட்டப் பட்டிருந்தது. இந்த விபத்தால் அந்தக் கட்டிடம் உடனடியாக சீல் வைக்கப் பட்டது. இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அங்கு குடியிருந்தவர்கள் வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
ஷிப்ட் முறையில் வகுப்புகள்...
அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் மூடப்பட்டது. மாணவர்கள் அனைவரும், அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஷிப்ட் முறையில் அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
வழக்கு விசாரணை...
நாட்டையே உலுக்கிய இந்த கட்டிட விபத்தில் அரசு தவறிழைத்திருப்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஹைகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வங்கிக் கடன்...
இது ஒருபுறம் இருக்க இல்லாத வீட்டிற்கு தொடர்ந்து வங்கியில் கடனுக்கு வட்டி செலுத்தி வருவதாக இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர்கள் தொடர்ந்து கதறி வருகின்றனர்.
யாருடைய கை...?
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப் பட்ட கை ஒன்று இன்னமும் யாராலும் உரிமை கோரப்படாமல் மருத்துவமனையில் பாதுகாக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வானளாவிய கட்டடங்களைப் பார்த்து மெய் மறந்து இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திய சம்பவம் மவுலிவாக்கம் என்றால் அது மிகையில்லை.