செப்டம்பர் "ஷாக்".. உலகை நடுங்க வைத்த ஐலான்.. தமிழகத்தை கலங்கடித்த விஷ்ணுப்பிரியா!
சென்னை: செப்டம்பர் மாதம் உலகை உலுக்கிய மாதமாக அமைந்தது.. சின்னஞ் சிறு சிரிய சிறுவன் ஐலானின் இறந்த உடல் கடற்கரையில் கிடந்த கோலம் அனைவரையும் அதிர வைத்து விட்டது.
அடுத்த சோகம் மெக்காவில் நடந்தது. ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியது.
இன்னொரு பெரும் பரபரப்பு திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மர்ம மரணம். பெரும் விவாதத்தை எழுப்பிய சம்பவம் இது.
ஐலான் மரணம்
சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.
தடம்புரண்ட மங்களூர் ரயில்
செப்டம்பர் 4ம் தேதி சென்னை - மங்களூர் ரயில் விருத்தாச்சலம் அருகே தடம்புரண்டதில் 40க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
திக்விஜய் சிங் திருமணம்
செப்டம்பர் 6ம் தேதி, தனக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்குக்கும் திருமணமாகி விட்டதாக செய்தி வாசிப்பாளர் அம்ரிதா ராய் அறிவித்தார்.
இந்தியா மிஞ்சாது.. பாக். மிரட்டல்
செப்டம்பர் 7ம் தேதி, எங்களுடன் போரிட்டால் இந்தியாவுக்கு தாங்க முடியாத பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஷெரீப் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
சோனியாவுக்குப் பதவி நீட்டிப்பு
செப்டம்பர் 8ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டு அக்கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலீட்டாளர்கள் மாநாடு
செப்டம்பர் 9ம் தேதி சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் மூலமாக ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
புதிய மனித இனம்
செப்டம்பர் 10ம் தேதி ஹோமோ நலடி என்ற புதிய வகை மனித இனம் குறித்த ஆதாரம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ நலடி வகை மனிதனின் எலும்பு மிச்சங்கள் சிக்கின.
மெக்கா விபத்து
செப்டம்பர் 11ம் தேதி சவூதி அரேபியாவில் மெக்கா பெரிய மசூதி வளாகத்தில் ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உள்பட 107
பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பிஆர்பி பரபரப்பு
செப்டம்பர் 13ம் தேதி மதுரை அருகே மேலூரில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாக கூறப்பட்ட இடத்தில் நடந்த தோண்டியெடுக்கும் பணியின்போது மனித எலும்புக் கூடுகள் சிக்கின.
விஷ்ணுப்பிரியா மரணம்
செப்டம்பர் 18ம் தேதி பரபரப்பான கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தனது போலீஸ் குடியிருப்பு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
டால்மியா மறைந்தார்
செப்டம்பர் 20ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா உடல் நலக்குறைவு காரணமாக தனது 75வது வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.
அட்டாக் பாண்டி சிக்கினார்
செப்டம்பர் 21ம் தேதி, மதுரை பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி, இரண்டரை வருட தலைமறைவுக்குப் பின்னர் சிக்கினார்.
சமூக வலைதள உத்தரவு
செப்டம்பர் 22ம் தேதி சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து கொள்ளும் தகவல்கள 90 நாட்களுக்கு பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்ந்து அந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
தயானந்த சரஸ்வதி மரணம்
செப்டம்பர் 23ம் தேதி, சுவாமி தயானந்த சரஸ்வதி ரிஷிகேஷில் மரணமடைந்தார்.
ஹஜ் கூட்ட நெரிசல்
செப்டம்பர் 23ம் தேதி சவூதி அரேபியாவில் மினா நகரில் நடந்த ஹஜ் பயணிகளிடையே ஏற்பட்ட மிகப் பெரிய கூட்ட நெரிசலில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
செவ்வாயில் தண்ணீர்
செப்டம்பர் 28ம் தேதி செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையிலேயே தண்ணீர் இருப்பதாக நாசா அறிவித்தது.
கறிக்காக ஒரு கொடூரக் கொலை
செப்டம்பர் 28ம் தேதியன்று, மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் 50 வயதான முகம்மது இக்லாக் என்பவரையும், அவரது 22 வயது மகனையும் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மத வெறியர்கள், சரமாரியாக தாக்கியதில் இக்லாக் பரிதாபமாக உயிரிழந்தார்.