நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்... காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிறப்பு தீர்மானம்?
2018-19ம் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான சட்டசபை பட்ஜெட் கூட்டம் நாளை தொடங்குகிறது.
சென்னை : 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தாக்கலின் போதே காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 2019ல் நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தமிழக அரசு ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் நிலையில் புதிய அறிவிப்புகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அரசின் நிகர கடன் தொகையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துத் துறைகளிலும் வருமானத்தை பெருக்கும் வகையிலான அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தனியார் வசம் உள்ள கணிம வள மற்றும் கிரானைடு குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில இலவச திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாமல் சத்தமில்லாமல் மூடுவிழா காணப்படலாம் என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
மொத்தத்தில் தமிழக பட்ஜெட் புதிய அறிவிப்புகள் இல்லாமல், நிதி ஒதுக்கீடு மற்றும் வருவாயை பெறுக்குவதற்கான அறிவிப்புகளை உள்ளடக்கிய அம்சங்களாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சிறப்பு தீர்மானமும் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து சட்டசபையில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.