2019 வெப் சீரியல்களில் ஒரு திடீர் புரட்சி.. குயின்.. நோ டவுட்.. ஆனால் அவ்வளோ ஒர்த்தா இல்லையே!
சென்னை: வெப் சீரிஸில்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றை விவரிக்கும் குயின் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
வெப் சீரிஸில்களை தொடர்ந்து பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குகிற சூழ்நிலை அவ்வளவாக இருப்பதில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் வரலாறு என்பதால் குயின் எப்படித்தான் இருக்கிறது என ஒரு இரவு முழுவதும் மெனக்கெட்டுத்தான் பார்த்தேன்.
ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ஷக்தி எனும் ரம்யா கிருஷ்ணனின் பேட்டியினூடாக இந்த வரலாற்று தொடர் நகருகிறது. முதலில் குயின் தொடரில் ஆடியோதான் நம்மை படாதபாடு படுத்திவிட்டது.
ஜெ.வின் வறுமை பின்னணி
ஜெயலலிதாவும் சரி அதிமுக தொண்டர்களும் சரி.. அவர் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்கிற ரேஞ்சுக்குத்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குயின் இந்த அடிப்படையையே தகர்த்துவிடுகிறது. வறுமையில் போராடுகிற ஒரு துணை நடிகையின் குடும்பமாக ஜெயலலிதாவின் இளம்பிராயத்து வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தமிழ் சினிமாவில் எப்படியான இடத்தில் இருந்தார் என்கிற இயல்பான தேடலை நமக்கு ஏற்படுத்துகிறது.
பட்டவர்த்தனமான உண்மை
ஜெயலலிதாவின் கல்வித் தகுதி குறித்த காட்சிகள் மிகைப்படுத்தலாக இருக்கலாமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இவைகள் அனைத்தும் கூட ஒரு புனைவுக்குரியது என நகர்ந்துவிட்டு வரலாற்று கட்டத்துக்குள் நுழைந்தால் அடடே! இப்படியெல்லாம் கூட உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லி இருக்கிறாரே இயக்குநர் கெளதம் என நினைக்க வைக்கிறது.
வில்லத்தனமான எம்ஜிஆர்
அதேநேரத்தில் இந்த பட்டவர்த்தனமான உண்மைகள் 3 மணிநேர திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தால் திரையரங்குகள் என்னவாகி இருக்கும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஜி.எம்.ஆர். என்கிற எம்ஜிஆர் கதாபாத்திரம் நடிகைகளை அணுகுகிற விதத்தில் வெளிப்படுத்துகிற வில்லத்தனங்கள் மிக மிக நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டும்
அரசல் புரசலாக எம்ஜிஆர் குறித்து பேசப்பட்ட வெளிப்படுத்தப்பட்ட சேட்டைத்தனங்களை ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிற வரலாற்றில் அள்ளித்தெளித்துவிட்டுப் போகிறது குயின். இந்த காட்சிகள் ஒவ்வொன்றையும் விவரித்தால் குயின் வெப் சீரியலின் கதி அதோகதிதான்.. சிவாஜி ரசிகர்களும் சேர்ந்து பஞ்சாயத்துக்கு வந்துவிடுவார்கள்.
ஜெ. வாழ்வில் சோபன்பாபு
ஜெயலலிதாவின் எம்ஜிஆருக்கு பிந்தைய வாழ்க்கை சைதன்யா என்கிற சோபன்பாபுவுடன் தொடருகிறது. அதிலே நம்ம துக்ளக் சோ பாத்திரமும் அடக்கமாக்கப்பட்டிருக்கிறது. சோபன்பாபுவுடனான வாழ்க்கையில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவும் சோபன்பாவும் ஒரே வீட்டில் வாழ்ந்த குமுதம் கட்டுரைகளையும் படங்களையும் நினைவுபடுத்துகிற காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை.
ஜெ.வின் அடேங்கப்பா முகம்
அரசியல் ஜெயலலிதாவாக, ரம்யா கிருஷ்ணன் உருமாறும் காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அங்கிருந்துதான் ஜெயலலிதா என்கிற ஆளுமையின் இன்னொரு அடேங்கப்பா முகமும் அதுவும் ராமாரவம் கார்டனில் காரிலேயே அடம்பிடித்து வலம் வரும் காட்சிகள் அட்டகாசம்.
வரலாற்று முரணாக..
ஜெயலலிதாவை எம்ஜிஆர் ராஜ்யசபா எம்.பி.யாக்க, பின்னர் டெல்லியில் அவர் எப்படி சதி செய்தார் என ஜானகி அம்மாள் சொல்ல சொல்ல... அப்படி எல்லாம் எதுவுமே தாம் செய்யாதது போல ரம்யா கிருஷ்ணன் பதறுவது வரலாற்றை தெரிந்தவர்களுக்கு பெரும் முரண்.. ஏனெனில் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருக்கும் போது ராஜீவுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தை சேலம் கண்ணன் வெளியிட்ட வரலாறு நாடறியும்.
அன்றைய அதிமுக
ஜெயலலிதாவின் அரசியல் பாத்திரத்தை அப்பாவித்தனமாக காட்டுவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் ஜெயலலிதா, அதிமுக கொள்கை பரப்பு செயலாளரானது முதலே அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆர்.எம்.வீ உள்ளிட்ட பல அமைச்சர்களை கட்டம் கட்டுகிற நிலைமைக்கு எம்ஜிஆர் தள்ளப்பட்டார்; எஸ்டிஎஸ் தனிக்கட்சியே தொடங்கினார் என்பதெல்லாம் வரலாறு.
சசிகலா பாத்திரம்
ஆனால் இவற்றை பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் ஜெயலலிதாவை ஒரு பரிதாபத்துக்குரிய, போராட்டத்துக்குரிய ஆளுமையாக சித்தரிக்க முயற்சிக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டியது சசிகலாவின் கதாபாத்திரம்தான். ஆரம்பம் முதலே ஜெயலலிதாவை முன்னிறுத்த சசிகலா அண்ட் கோ முயற்சிப்பதாக காட்டப்பட்டிருப்பது சற்றே மிகைப்படுத்தலும் நெருடலாகவும் இருக்கிறது.
நுனிப்புல் தொடர்
முதல்வராக பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது ரம்யா கிருஷ்ணன் காட்டுகிற முகபாவனைகள், உதிர்க்கிற வார்த்தைகள்தான், இப்படித்தான் அந்த அம்மா இருந்தாங்க.. என்பதை மெய்யாலுமே சொல்லிவிட்டுப் போகிறது. பொதுவில் பார்த்தால் ஜெயலலிதாவின் வரலாற்றை வெப் சீரியலாக்க வேண்டும் என்கிற நோக்கம் தவிர எந்த வித அரசியல் தெளிவோ, தமிழகம் சார்ந்த அரசியல், வரலாற்று புரிதலோ இல்லாத நுனிப்புல் மேயந்த ஒரு தொடராகவே இந்த குயின் நமக்கு தோன்றுகிறது., 2019-ம் ஆண்டு அரசியல் வெப் சீரியல் உலகில் பலமுறை பார்த்து பார்த்து வரலாற்றை உள்வாங்கி கொள்ள வேண்டிய படம் என்கிற அளவு மதிப்பீடு கொள்ளலாம்.