திருவள்ளூர்: பணியின்போது உயிரிழந்த தலைமை காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
பணியின்போது உயிரிழந்த திருவள்ளுர் தலைமை காவலர் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video
திருவள்ளூர்: திருவள்ளூரில் பாதுகாப்பு ஒத்திகையின்போது மரணமடைந்த தலைமை காவலர் உடல், இன்று 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலோர பகுதியில் நேற்று முதல் சாகர் கவாச் தீவிரவாத ஊடுருவல் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மப்பேடு காவல் நிலைய தலைமை காவலர் கோபி என்பவர் பழவேற்காடு பகுதியில் ஒத்திகை பணியில் ஈடுபட்டிருந்தபோதுஅவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, பரிசோதித்த மருத்துவர், காவலர் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டைக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
பொது மக்களின் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது 7 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் உடல் அடக்கம் நிகழ்ச்சியிலும் காவல் துறை சார்பில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.