பாலக்காட்டிலிருந்து மிரட்டல்... 22 பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
சென்னை: கோவையைச் சேர்ந்த 22 பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களுக்கு கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதால் அவர்களுக்குத் துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள மாநில இந்து முன்னணி தலைமை அலுவலகத்துக்கு இரு நாட்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. பாலக்காட்டில் இருந்து தபாலில் வந்த கடிதத்தில், தமிழகத்தில் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவையிலுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி, பா.ஜ.மாநில செயலாளர் செல்வகுமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் இந்து முன்னணி சிவலிங்கம், பொள்ளாச்சி இந்து முன்னணி நகர தலைவர் மாரிமுத்து, மலுமிச்சம்பட்டி ராமகிருஷ்ணன், கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி வக்கீல் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம், இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார் உள்பட 22 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.