22 தமிழக- கேரள மாணவர்களின் விசா ரத்து... கோவை ஏஜென்சியால் ஆஸ்திரேலியாவில் தவிப்பு
22 தமிழக மற்றும் கேரள மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: தமிழக- கேரள மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது இளங்கலை பட்டத்தை இந்தியாவில் படித்துவிட்டு முதுகலை பட்டத்துக்காக வெளிநாடுகளை விரும்புகின்றனர்.
இதற்காக தனியார் ஏஜென்சிகள் மூலம் விசா வாங்குவது உள்ளிட்ட நடைமுறைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்வு செய்யும் ஏஜென்சிகள் நேர்மையானவைகளாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
இதே போலியான டுப்பாகூர் ஏஜென்சிகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்றால் அவதிப்படுவது உறுதி என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த செய்தி. ஆம். தமிழகம் மற்றும் கேரளத்தை சேர்ந்த 22 மாணவர்கள் எம்பிஏ படிக்க ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் கோவையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் சென்றுள்ளனர். உண்மையான ஆவணங்களை சமர்ப்பித்தும் போலி தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 22 பேரின் விசாக்களை ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது.
இதனால் மாணவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். இதுபோல் படிப்பதற்கும், பணியாற்றவும் சென்ற மேலும் சிலரது விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.