தடையை மீறி ஜல்லிக்கட்டு.. 23 பேர் கைது.. காளையை சிறைபிடித்த போலீஸால் பரபரப்பு!
தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முயன்றதாக கூறி 23 பேரை நாகூர் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தமிழர் அமைப்புகளை கொதிப்படைய வைத்துள்ளது.
நாகூர்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கோர்டில் வழக்கு தொடர்ந்ததால் கோர்ட் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்து விட்டது. இது தமிழர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும், உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து வருகின்றது.
இந்தநிலையில் நாகூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் இந்திய தேசியலீக் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், நடராஜன் உள்பட போலீசார் நாகூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நாகை மாவட்டம் போலகம், கூத்தாடி தோப்பு பகுதியிலிருந்து காளை மாட்டை ஒரு மினி வேனில் ஏற்றி கொண்டு வந்தனர். நாகூர் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த மினிவேனை மறித்து காளையை சிறைபிடித்தனர்.
அப்போது அங்கு வந்த இந்திய தேசிய லீக் கட்சியினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அத்தாவுல்லா உள்பட 23 பேரை கைது செய்தனர். இது தமிழர் அமைப்புகளை கோபம் கொள்ள செய்துள்ளது.