கோவை அருகே கடத்தி வரப்பட்ட 230 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 பேர் அதிரடி கைது
230 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை அருகே ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 230 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த சில தினங்களாகவே கஞ்சா விநியோகம் அதிகளவில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னியம்பாளையம் பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக ஜீப் ஒன்று வந்தது. அதனை மடக்கி நிறுத்திய போலீசார், ஜீப்பினுள் சோதனையை மேற்காண்டனர். அதில் மறைத்து எடுத்து வரப்பட்ட 230 கிலோ எடைக்கொண்ட 110 கஞ்சா பொட்டல்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவற்றினை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த பாலாஜி, மற்றும் தேனியைச் சேர்ந்த குபேரன் என தெரியவந்தது.
மேலும் இந்த கஞ்சா பொட்டலங்களை ஆந்திராவிலிருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தல் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், பாலாஜி, குபேரனை கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.