பார்வையற்ற மாணவர் பட்டம் வாங்க மறுப்பு: நெல்லை பல்கலையில் ஆளுநர் முன்பு பரபரப்பு !
நெல்லை: மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையற்ற மாணவர் ஒருவர், பட்டமளிப்பு விழா மேடையிலேயே தனது முனைவர் பட்டத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் திரும்பி வழங்கியதால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரோசய்யா, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது மாணவ, மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக பட்டம் வாங்கிச் சென்றனர்.
நாட்டுப்புற கலை துறையில் பார்வையற்ற பெரியதுரை மற்றும் ஜெயகீதா ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றனர். யாரும் எதிர்பாராத வகையில் பெரியதுரை தனக்கு வழங்கிய சான்றிதழை ஆளுநரிடம் திருப்பி வழங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இடஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில் தனக்கு வழங்கிய பட்டத்தை ஏற்க முடியாது என்று கூறிய அவர், மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
பின்னர் பெரியதுரையிடம் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பட்ட சான்றிதழை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெரியதுரை, விருப்பமில்லாத தன்னிடம் பட்டத்தை திணிப்பதாக கூறினார்.