சென்னையில் 8 நகைக்கடையில் ஒரே நாளில் ரூ. 25கோடிக்கு நகை விற்பனை- 2வது நாளாக ஐடி ரெய்ட்
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கணக்கில் காட்டப்படாதவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரூ. 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு 8 நகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடந்தது. நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனையில் ரூ. 25 கோடிக்கு நகை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. நகை விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் மோடி. நவம்பர் 9ம் தேதியன்றி வங்கிகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் அறிவித்தார் மோடி.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியன்று இரவு சென்னையில் பல நகைக்கடைகளில் மக்கள் குவிந்தனர். தங்களிடம் உள்ள பணத்தை மொத்தமாக கொடுத்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
கறுப்பு பணம் எல்லாம் கறுப்பு தங்கமாக மாறியது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு தகவல்கள் சென்றதைத் தொடர்ந்து, சென்னையில் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
பாரிமுனை என்எஸ்சி போஸ் ரோட்டில் நேற்று மாலை 6 மணியளவில் பாத்திமா ஜூவல்லரி, தனலட்சுமி ஜூவல்லரி, விக்னேஷ் ஜூவல்லரி, கவுதம் ஜெயின் ஜூவல்லரி உட்பட 10க்கும் மேற்பட்ட நகைகடைகளில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத பணம், முக்கிய ஆவணங்களை வருமான துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனையில் ரூ. 25 கோடிக்கு நகை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. நகை விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.