ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. கடந்த 4 நாள்களில் தமிழக மீனவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. அவர்களது 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் அட்டூழியத்தால் மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து 2 விசைப் படகுகளில் சென்ற 15 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதே போல புதுக்கோட்டையிலிருந்து 2 படகுகளில் சென்ற 9 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவா்கள் 24 பேரையும், அவர்கள் வந்த 4 படகுகளையும் சிறை பிடித்துள்ளனர்.
அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துசென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கோடியக்கரை மீனவர்கள் 8 பேரை சுற்றி வளைத்தபோது அதில் சந்தோஷ் என்ற மீனவர் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.