பீரோவை உடைத்து கொள்ளை... இதெல்லாம் சரி.. பீரோவையேவா தூக்கிட்டு போய் கொள்ளையடிக்கிறது?
பீரோவையே தூக்கி சென்று கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.
ரியலூர் : கொள்ளையிலே இது புது தினுசா இல்ல இருக்கு. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, பீரோவை உடைத்து கொள்ளை... இதெல்லாம் சரி.. பீரோவையேவா தூக்கிட்டு போயா கொள்ளையடிக்கிறது?
அரியலூர் மாவட்டம் உள்ள கிராமம் உட்கோட்டை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமு. புழுக்கம் காரணமாக நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் ராமு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அதனால் வீட்டினுள் நுழைந்த அவர்கள் பீரோவை திறக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. அதனால் பீரோவை உடைக்கலாம் என்று முயற்சித்தனர். உடைக்கவும் முடியவில்லை. கடுப்பாகி போன கொள்ளையர்கள், பீரோவை அலேக்காக தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.
ஒரு காட்டுப் பகுதிக்குள் தூக்கி சென்ற அவர்கள் அங்கு பீரோவை வைத்து சாவகாசமாக உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்பு அதிலிருந்து 25 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தையும் அபேஸ் செய்து பீரோவையும் தூக்கி எறிந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இதையடுத்து, காலையில் தூங்கி எழுந்து வந்த ராமு, வீட்டில் இருந்த பீரோவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னுடைய பீரோவை அக்கம் பக்கமெல்லாம் தேட ஆரம்பித்தார். கடைசியில் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தன் பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும், நகை, பணம் கொள்ளை போனதையும் அறிந்தார்.
இதையடுத்து இந்த கொள்ளை குறித்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், பீரோவையே தூக்கி சென்று கொள்ளையடித்தவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாம கேள்விப்பட்டதெல்லாம் பீரோ புல்லிங் கொள்ளை என்றுதான். இப்படி பீரோவையே தூக்கிட்டு கொள்ளையடிக்கிற அட்டூழியத்துக்கு என்ன பெயரோ?