மருத்துவ கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு: 12ல் ரேங்க் பட்டியல்!
சென்னை: எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான ரேண்டம் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியல் வருகின்ற 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு 2,555 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக தமிழ்நாட்டு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 172 ஆகும்.
அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்று மட்டுமே உள்ளது. அதில் 100 இடங்களில் சேரலாம். அதில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 15 போக மீதம் உள்ள 85 இடங்களில் பி.டி.எஸ். படிப்பில் சேரலாம். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் 12 உள்ளன. அவற்றில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தவிர 993 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் 27 ஆயிரத்து 907 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மாணவர்களில் ஒரே மதிப்பெண்ணை இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ எடுத்திருந்தால் அவர்களில் யாரை முதலில் கலந்தாய்வுக்கு அழைப்பது என்பதற்கு விடை அளிக்கும் வகையில் ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படும் இந்த எண்ணில் எது அதிகமாக இருக்குமோ அந்த எண் கொண்டவர்தான் முதலில் அழைக்கப்படுவார்.
இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். www.tnhealth.org என்ற இணையத்தில் மாணவர்களின் ரேண்டம் எண்களை தெரிந்து கொள்ளலாம்.
உயிரியல், வேதியியல், நான்காவது விருப்பப் பாட மதிப்பெண்ணும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே ரேண்டம் எண் பயன்படும். கடந்தாண்டு மருத்துவக் கலந்தாய்வின்போது, சுமார் 10 மாணவர்களுக்கு மட்டும் ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் பிளஸ்-2 மருத்துவ கட் ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ரேங்க் பட்டியல் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 27 ஆம் தேதி 2வது கட்ட கலந்தாய்வு முடிந்து ஆகஸ்டு 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன.